சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஹெச்.ஜி.ரமேஷ் நியமனம் | சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கர் நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஹெச்.ஜி.ரமேஷ் நியமிக்கப் பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.கே.கவுல், காஷ்மீரைச் சேர்ந்தவர். 1958 டிச.26-ல் பிறந்த இவர் ஏற்கெனவே பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். அதன்பிறகு கடந்த 2014 ஜூலை 26-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இந்நிலையில் இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை வழக்கம்போல தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகி யோர் அடங்கிய முதல் அமர்வு வழக்குகளை விசாரிக்கத் தொடங் கினர். அப்போது வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஒரு வழக்கு தொடர்பாக முறையிட முயன்றார். அப்போது தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், '' நான் வழக்குகளை விசாரிப்பது இன்றோடு (நேற்று) கடைசி நாள்'' என்றார். மதியம் 12 மணிக்கெல்லாம் விசாரணையை முடித்துக்கொண்டு, "இதுவரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி" என்று கூறி வணக்கம் தெரிவித்துவிட்டு, தனது சேம்பருக்கு சென்றார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நாளை (17-ம் தேதி) பதவியேற்க உள்ள எஸ்.கே.கவுலுக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரிவுபச்சார விழா நடைபெறுகிறது. தடாலடி உத்தரவுகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி சில வழக்கறி ஞர்கள் தலைமை நீதிபதியின் முன் பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர். அதன் தொடர்ச்சியாக உடனடியாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையை சிஐஎஸ்எப் போலீஸாரின் பாதுகாப்பு வளை யத்துக்குள் கொண்டுவந்து தடாலடி உத்தரவு பிறப்பித்தார். அன்று முதல் இன்று வரை சிஐஎஸ்எப் போலீஸாரின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வருகிறது. இதேபோல் 'மாதொருபாகன்' நாவல் தொடர்பான வழக்கில் கருத்து சுதந்திரத்தை யாரும் தடுக்க முடியாது என பரபரப்பு தீர்ப்பளித்தார். விளைநிலங்களை அங்கீகாரமற்ற வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு தடை விதித்தது, உயர் நீதிமன்றம் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு பிறப் பித்தது, நீர்நிலைகள் மற்றும் சென்னையின் நெருக்கடியான பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற உத்தரவிட்டது, வழக் கறிஞர் சட்டத்தில் சட்ட திருத்தம், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத அரசு உயர் அதிகாரிகளை நேரில் ஆஜராகச் செய்து உத்தரவுகளை நிறைவேற்றச் செய்தது என பல்வேறு முக்கிய உத்தரவுகளை எஸ்.கே.கவுல் தனது பணிக்காலத்தில் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள் ளதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகிக்கும் ஹெச்.ஜி.ரமேஷை நியமிப்பதற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் பதவியேற்பு தேதி விரைவில் வெளியாகவுள்ளது. புதிய தலைமை நீதிபதியாக நிய மிக்கப்படவுள்ள ஹெச்.ஜி.ரமேஷ், 1957-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். 1982-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த இவர் கடந்த 2003-ல் கர்நாடக உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2005-ம் ஆண்டு முதல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டு, தற்போது அங்கு மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
No comments:
Post a Comment