Monday 22 April 2019

1. அதிசயங்கள் நிறைந்த மனித உடல்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு அறிவியல் தகவல்கள் ‘தெரிந்துகொள்வோமே...’ என்ற இந்த புதிய பகுதி மூலம் வாரந்தோறும் வெளியாகிறது

இறைவனின் படைப்பில் மனித உடல் ஒரு சிக்கலான படைப்பு என்பதை நாம் காணப்போகும் சில எண்ணிக்கையால், சொல்லப் போகும் விஷயங்களால் அறிந்துகொள்ளலாம்.

மனித உடல் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது தெரியுமா?

நம் உடலில் 37.2 டிரில்லியன் செல்களும், அவைகளில் 200 விதமான வகைகளும் இருக்கின்றன.

நம் தோலில் 100 பில்லியன் தோல் செல்கள் உள்ளன.

நம் மூளையில் 100 பில்லியன் நியூரான்கள் உள்ளன. நாம் மூளையில் தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிந்தனைகள் செய்கிறோம்.

நமது மூளை 1 குவாட்ரில்லியன் (1 மில்லியன் பில்லியன்) பிட் (Bit) அளவு தகவலைத் தாங்கக் கூடியது.

நம் உடலில் 60 மில்லியன் ‘உணர்வு ஏற்பிகள்’ (receptors) உள்ளன.

கண்களைப் பொறுத்தவரை 127 மில்லியன் விழித்திரை செல்கள் உள்ளன. இதன் பயனாகத்தான் நம்மால் 10 மில்லியன் வெவ்வேறு நிறவேறுபாட்டைக் காண இயலுகிறது.

நம் கண்களில் 120 மில்லியன் ‘கம்பி செல்’கள் (rod cells) மற்றும் 6 மில்லியன் ‘கூம்பு செல்’கள் (cone cells) உள்ளன.

நமது கண் மட்டும் ஒரு டிஜிட்டல் கேமராவாக இருந்தால் அதன் ஒளியியல் தீர்மானம் (digital resolution) 576 மெகா பிக்சல் கொண்டதாயிருக்கும்.

மூக்கில் 1000 நுகர்வு ஏற்பிகள் உள்ளன. இதன் மூலம் நம்மால் 50 ஆயிரம் வெவ்வேறு வாசனைகளை வேறுபடுத்தி உணர முடியும்.

நம் உடலில் 6 லிட்டர் ரத்தம் ஓடுகிறது. 42 டிரில்லியன் சிவப்பு ரத்த அணுக்கள் உள்ளன. இவை சுமார் 42 பில்லியன் ரத்த நாளங்களில் பயணிக்கின்றன.

நாம் தினசரி 23,040 முறை மூச்சு விடுகிறோம். இதயம் தினசரி 1,15,200 முறை துடிக்கிறது.

நம் உடலில் 640 தசைநார்களும், அதன் பயனாய் 360 தசைகூட்டுகள் (joints) உள்ளன.

ஒவ்வொரு நாளும் நம் இதயம் தரும் சக்தியின் அளவால் நம்மால் ஒரு சாதாரண டிரக்கை 32 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்ல முடியும்.

சராசரி மனிதனின் வாழ்நாளில் நமது இதயம் ரத்தத்தை உடலில் பாய்ச்சும் அளவு 1.5 மில்லியன் பீப்பாய் அளவுக்கு சமம்.

நமது இதயம் உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்டாலும் தன் துடிப்பை உடனே நிறுத்தாது. ஏனெனில் இதயத்தில் உள்ள மின்சார உந்துவிசை சிறிது நேரம் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.

நம் தலையில் சுமார் ஒரு லட்சம் மயிர்க்கால்கள் உள்ளன. தினசரி சுமார் 100 மயிரிழைகள் உதிர்கின்றன.

சாதாரணமாய் மனித உடலில் தினசரி சுமார் 800 மி.லிட்டர் வியர்வை சுரக்கிறது.

ஒரு வளர்ந்த மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் 300 எலும்புகள் இருக்கும். நாளாவட்டத்தில் குழந்தை வளரும்போது சில எலும்புகள் ஒன்றோடொன்று இணைந்து விடும்.

சாதாரணமாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பும் அளவுக்கு சுமார் 23 ஆயிரம் லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறான்.

நம் உடலில் இரும்பு சத்து இருப்பதை அறிவோம். இந்த இரும்பு சுமார் 7.5 செ.மீ. நீளமுள்ள சாதாரண அளவு ஆணியை உருவாக்கும் அளவுக்கு உள்ளது.

நம் உடலின் எல்லா செல்களில் உள்ள டி.என்.ஏ. (DNA) வைப் பிரித்து நீட்டி இழுத்தால், அதன் நீளம் 10 பில்லியன் மைல்கள் இருக்கும். இது நாம் பூமியிலிருந்து புளூட்டோ கிரகம் சென்று திரும்பி வரும் அளவுக்கு சமம்.

நமது விரல்கள் 13 நானோ மீட்டர் அளவு குறைந்த பொருளையும் உணரும் தன்மை பெற்றவை.

நம் நாக்கில் உள்ள உணர்வு மொட்டுகள் 10 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும்.

நம் வயிற்றில் சுரக்கும் அமிலம் நம் தோலின் மீது பட்டால் ஒரு துளையே உருவாகும் அளவுக்கு காரத்தன்மை நிறைந்தது.

மனித உடலையும், அதில் உள்ள உறுப்பு களின் செயல்களையும் எண்ணிப்பார்க்கையில் ஒரு விந்தையே. இவ்வளவு அதிசயங்கள் நிறைந்த இந்த உடல் இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட பரிசே. அதை நலத்துடன் பாதுகாப்போம்.

முனைவர் ராஜன் ராமசுவாமி, சென்னை.

No comments: