சுரினாம்
தென் அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சிறிய நாடான சுரினாம் நாட்டில், இப்போது இந்திய வம்சா வளியினர் பலரை காணலாம். 1873 மற்றும் 1916-ம் ஆண்டுக்கு இடையில் டச்சுக்காரர்கள், இந்தியர்கள் பலரை ஒப்பந்த தொழிலாளர்களாக சுரினாம் கொண்டு சென்றனர். அவர்கள் சந்ததியினர் அங்கு தொடர்ந்து இருந்து வருவதன் காரணமாக, அந்த நாட்டின் மக்கள் தொகையில் 27 சதவிகிதத்தினர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் போஜ்புரி பேசும் இந்திய நாட்டவர்கள் பெரும்பாலானவர்கள். அங்குள்ள பள்ளிகளில் இந்தி மொழியும் கற்பிக்கப்படுகிறது. தீபாவளி போன்ற இந்திய பண்டிகைகள் அங்கு தேசிய விடுமுறை நாட்களாக கொண்டாடப்படுகின்றன. சுரினாம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பிரசாத் சந்தோகி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சமஸ்கிருதத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
மெக்சிகோ
மெக்சிகோவிற்கும், இந்தியாவிற்கும் பொதுவாக உள்ள விஷயங்களில் காரமான மசாலா பொருட்களும் ஒன்று என்பது பலரும் அறிந்ததே. காலனித்துவ காலத்தில் இருந்து, மெக்சிகன் மிளகாய், வெண்ணிலா மற்றும் சாக்லெட் ஆகியவை, போர்ச்சுகீசிய வணிகர்கள் வழியாக இந்தியாவிற்கு வந்தது. அதற்கு பதிலாக மிளகு, ஏலக்காய் போன்ற இந்திய மசாலா பொருட்கள், லத்தீன் அமெரிக்காவிற்கு சென்றன. அது மட்டுமல்ல இரண்டு நாடுகளின் கலாசாரமும், ஆன்மிகம் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்தியாவில் ஆயுர்வேதத்திற்கு முக்கியத்துவம் உள்ளதை போல, மெக்சிகோவில், பாரம்பரிய சிகிச்சை முறையான குராண்டரிஸ்மோ என்ற சிகிச்சை முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மெக்சிகோவில் உள்ள மாநிலமான ஒக்ஸாகாவில், இந்திய சுதந்திர தினமும், யோகா தினமும் கொண்டாடப்படுகிறது.
கிரீஸ்
கிரேக்க நாடுகள் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான தொடர்பு மிகவும் பழமையானது. கி.மு. 326-வது ஆண்டில், அலெக்சாண்டர் வட மேற்கு இந்தியாவின் சில பகுதிகளின் மீது படையெடுத்த காலத்தில் இருந்து, இந்திய கிரேக்க கலாசாரங்கள் இடையில் பரிமாற்றங்கள் ஏற்பட்டன. கிரேக்க மற்றும் சமஸ்கிருத கல்வெட்டுக்களுடன் கூடிய நாணயங்கள் இந்தியா மற்றும் கிரேக்க நாடுகளுக்கு இடையிலான பிணைப்பை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் தோன்றி மத்திய ஆசியாவில் பரவலாக காணப்படும் காந்தார கலை மூலமாகவும் இந்திய கிரேக்க உறவுகள் இடையிலான பிணைப்பை அறிந்து கொள்ளலாம்.
உஸ்பெகிஸ்தான்
இந்தியாவும், உஸ்பெகிஸ்தானும் மரபு ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், நெருங்கிய தொடர்பு கொண்டது. பட்டுப்பாதை வழியாக இந்தியாவிற்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையில் வர்த்தகங்கள் நடைபெற்றன. இந்திய வணிகர்கள், சமர்கண்டு மற்றும் புகாரா வழியாக வர்த்தக பாதைகளை அமைத்தனர். பின்னாளில், டெல்லி மற்றும் தாஸ் கெண்ட் இடையே நேரடி விமான சேவைகள் கூட தொடங்கப்பட்டன.
0 Comments
||| www.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||