உலகம்
- பாகிஸ்தானில் ஜூலை 1-ந் தேதி தொடங்கும் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு நிதிமந்திரி முகமது அவுரங்கசீப் தாக்கல் செய்தாா். சுமாா் ரூ.5.33 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் கூடுதலாக ரூ.77,343 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.64,361 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. (ஜூன் 10)
- 2025-ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்ட 148 நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா 131-வது இடத்தில் உள்ளது. இரு பாலினத்தவருக்கான பொருளாதார பங்கேற்பு, கல்வி வாய்ப்பு, சுகாதாரம் மற்றும் உயிா் வாழ்வு, அரசியல் அதிகாரமளித்தல் உள்ளிட்ட 4 காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. (ஜூன் 12)
இந்தியா
- கடந்த 2011-12-ம் நிதியாண்டில் இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை 34.44 கோடியாக இருந்தது. இது 2022-23-ம் நிதியாண்டில் 7.52 கோடியாகக் குறைந்துள்ளது. 11 ஆண்டில் 26.9 கோடி பேர் ஏழைகள் என்ற நிலையில் இருந்து மீண்டுள்ளனர். அதாவது 11 ஆண்டுகளுக்கு முன்பு 27.1 சதவீதமாக இருந்த ஏழைகளின் விகிதம் தற்போது 5.3 சதவீதமாக குறைந்துள்ளது. (ஜூன் 7)
- இந்திய விமானப் படைக்காக ரூ.10 ஆயிரம் கோடியில் 3 உளவு விமானங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த உளவு விமானங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரேடார்கள், கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இவை மிக நீண்ட தொலைவு பறக்கும் திறன் கொண்டவையாக இருக்கும். இரவு, பகல், மோசமான வானிலையிலும் இந்த உளவு விமானங்களை இயக்க முடியும். அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளிடம் மட்டுமே அதிநவீன உளவு விமானங்கள் உள்ளன. இந்த பட்டியலில் விரைவில் இந்தியாவும் இணைய உள்ளது. (ஜூன் 9)
- இந்திய ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் ராணுவத் துணை தலைமைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ராணுவ நடவடிக்கைகள் இயக்குநரகத்தின் தலைமை இயக்குநராகவும் அவர் தொடர்ந்து பணியாற்றுவார் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. (ஜூன் 9)
- இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியை தாண்டியதாகவும், மக்கள்தொகையில் முதலிடத்தில் நீடிப்பதாகவும் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ஜூன் 10)
- வீடு, கடைகளின் முகவரியை மிக துல்லியமாக அறிந்து கொள்வதற்காக தபால்துறை `டிஜிபின்’ எனும் டிஜிட்டல் முகவரி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால் தபால்காரர் குறிப்பிட்ட முகவரியை தேடி அலைய வேண்டியது இல்லை. மிக எளிதாக முகவரியை கண்டுபிடித்து விடலாம். (ஜூன் 12)
தமிழகம்
- இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் வேளாண் மாணவருக்கு தங்கப் பதக்கத்துடன் கூடிய நம்மாழ்வார் விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தார். (ஜூன் 7)
- ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பெரும் பூநாரைசரணாலயம் 524.78 ஹெக்டேர் பரப்பு கொண்டது. இந்த சரணாலயம் அமைக்கப்படுவதன் மூலம் இந்த உயிர்க் கோளக் காப்பகத்தின் பல்லுயிர் சமநிலை பாதுகாக்கப்படுவதுடன், இங்கு வருகைபுரியும் பறவை இனங்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் பறவைகள் சரணாலயத்தின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. (ஜூன் 8)
- செல்போன், லேப்டாப், சர்வர் போன்ற மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருவதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். (ஜூன் 10)
- இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை திருமங்கலத்தில் அடுக்குமாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்தியாவில் வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ ரெயில் செல்லும் முதல் திட்டமாகும். (ஜூன் 10)
பொருளாதாரம்
- இந்தியாவில் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 120.38 கோடியாக உயர்ந்துள்ளது. மே மாதத்தில் மொத்தம் 0.31 கோடி வாடிக்கையாளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இது 0.25 சதவீத மாதாந்திர வளர்ச்சியாகும். (ஜூன் 7)
- இந்தியாவில் துருப்பிடிக்காத இரும்பு (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) பயன்பாடு கடந்த 5 ஆண்டுகளில் உயா்ந்துள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் அதற்கான தேவை 39.4 லட்சம் டன்னாக இருந்தது. 2023-24-ம் நிதியாண்டில் அது 44.9 லட்சம் டன்னை தொட்டது. கடந்த மாா்ச் 31-ல் முடிவடைந்த 2024-25-ம் நிதியாண்டில் துருப்பிடிக்காத இரும்புக்கான தேவை 48 லட்சம் டன்னை எட்டியது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 84 சதவீத வளா்ச்சியாகும். (ஜூன் 9)
- இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.4 சதவீதம் குறைந்து 2.49 கோடி டன்னாக இருந்தது. (ஜூன் 11)
- இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி கடந்த 2024-ம் ஆண்டில் 25.467 கோடி கிலோவாக உயர்ந்தது. (ஜூன் 12)
- காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலை குறைவாக இருந்ததால், கடந்த மே மாதத்தில் சில்லறை பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவாக 2.82 சதவீதமாக குறைந்தது. (ஜூன் 12)
அறிவியல்
- இந்திய விமானப் படையும், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் சேர்ந்து `காண்டீவா’ என்ற புதிய ரக ஏவுகணையை விரைவில் சோதனை செய்ய உள்ளன. இந்த ரக ஏவுகணை திரவ எரிபொருள் மூலம் இயக்கப்படும். வானில் இருந்து அதிகபட்சமாக 300-350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் ஆற்றலை இது கொண்டுள்ளது. மணிக்கு 5 ஆயிரத்து 370 கி.மீ. வேகத்தில் இலக்கை நோக்கி பாயும் என்று பாதுகாப்பு துறை நிபுணர்கள் தெரிவித்தனர். (ஜூன் 10)
விளையாட்டு
- பிரெஞ்சு ஓபன் டென்னிசில் பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 21 வயதான கோகோ காப்புக்கு இது 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். அதே போல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் கோப்பையை தக்கவைத்துக் கொண்டார். அல்கராஸ் தற்போது வென்றிருப்பது அவரின் 5-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். (ஜூன் 7)
- நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் உள்ளூர் வீரரான மாக்னஸ் கார்ல்சென் 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்தியாவின் குகேசுக்கு 3-வது இடம் கிடைத்தது. (ஜூன் 7)
- தைவான் ஓபன் சர்வதேச தடகள போட்டி தைபே சிட்டியில் நடந்தது. இதில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த வித்யா ராம்ராஜ் 56.53 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். (ஜூன் 8)
- ஐரோப்பிய நாட்டு அணிகளுக்கு இடையிலான 4-வது நேஷனல் லீக் சர்வதேச கால்பந்து இறுதிப்போட்டியில் போர்ச்சுக்கல் அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. போர்ச்சுக்கல் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவது இது 2-வது முறையாகும். (ஜூன் 9)
- உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் நடந்தது. இதில் நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை இளவேனில் 231.2 புள்ளிகள் எடுத்து வெண்கலப் பதக்கம் பெற்றார். (ஜூன் 10)
- ஆஸ்திரியாவில் ஆஸ்திரியா நடை பந்தய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் மகளிருக்கான 10 கிலோமீட்டர் பந்தயத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி 47 நிமிடங்கள் 54 விநாடியில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். (ஜூன் 10)
0 Comments
||| www.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||