கடந்து வந்த பாதை | பிப்ரவரி 3- 9 | போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. பிப்ரவரி 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 கடைகள் எரிந்து சாம்பலாயின. வீரவசந்தராயர் மண்டபக் கூரை இடிந்து விழுந்தது. தீ அணைக்கப்பட்டதால் ஆயிரங்கால் மண்டபம் தப்பியது. சேதம் குறித்து ஆய்வு நடத்த நிபுணர் குழு அமைக்கப்பட்டது. (பிப்ரவரி 3)
- கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியருக்கு பதவி உயர்வு வழங்க ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கிய துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் தர்மராஜையும் போலீசார் கைது செய்தனர். (பிப்ரவரி 3)
- நியூசிலாந்தின் மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று வரலாறு படைத்தது. (பிப்ரவரி 3)
- குஜராத் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2016- 2017-ம் ஆண்டில் இந்தியாவில் ரூ. 4 லட்சம் கோடி அன்னிய முதலீடு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். (பிப்ரவரி 3)
- கடந்த ஜனவரி மாதத்தில் பங்கு மற்றும் கடன் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் ரூ. 22,254 கோடி முதலீடு செய்துள்ளனர். (பிப்ரவரி 4)
- காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். (பிப்ரவரி 4)
- செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 118 ரன்னில் சுருட்டிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (பிப்ரவரி 4)
- புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அமெரிக்க வீராங்கனை பீவென் ஜாங்குடன் போராடித் தோல்வி அடைந்தார். (பிப்ரவரி 4)
- சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லை 8 ஆயிரத்து 878 சதுர கிலோமீட்டர் பரப்பளவு விரிவாக்கம் செய்யப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. (பிப்ரவரி 5)
- தமிழகத்தில் சரக்கு- சேவை வரி (ஜி.எஸ்.டி.) இலக்கைத் தாண்டி ரூ. 19 ஆயிரத்து 592 கோடி வசூலானது. இது இந்திய அளவில் இரண்டாவது இடமாகும். (பிப்ரவரி 5)
- மத்திய பட்ஜெட்டில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்தது. (பிப்ரவரி 6)
- கடுமையான அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் மாலத்தீவு நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். இதில் இந்தியா தலையிட முன்னாள் அதிபர் முகமது நஷீத் வேண்டுகோள் விடுத்தார். (பிப்ரவரி 6)
- கடன் வட்டி விகிதங்கள் பற்றிய தனது கொள்கை முடிவுகளை பாரத ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. எனவே 'ரெப்போ ரேட்' எந்த மாற்றமும் இன்றி 6 சதவீதமாக நீடிக்கிறது. 'ரிவர்ஸ் ரெப்போ ரேட்'டும் மாறாமல் 5.75 சதவீதமாக உள்ளது. (பிப்ரவரி 7)
- குறைந்த விலை வீடு வாங்குவோரிடம் சரக்கு, சேவை வரி வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. சர்க்கஸ், நடன, நாடக நிகழ்ச்சிகளில் நபருக்கு ரூ. 500 வரையிலான நுழைவுக் கட்டணத்துக்கும் ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டது. (பிப்ரவரி 7)
- வருகிற 2021- 2022-ம் நிதியாண்டுக்குள், நாட்டில் புதிதாக 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. (பிப்ரவரி 7)
- தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்தன. 7 பேர் பலியாகினர், 250 பேர் படுகாயம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. (பிப்ரவரி 7)
- கேப்டவுனில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்த இந்தியா, 'ஹாட்ரிக்' வெற்றியைப் பெற்றது. (பிப்ரவரி 7)
- கிம்பெர்லியில் தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டு களை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி படைத்தார். (பிப்ரவரி 7)
- மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு நிதி ஒதுக்காததைக் கண்டித்து அம்மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. நாடாளுமன்றத்தில் ஆந்திர எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். (பிப்ரவரி 8)
- வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்த நாட்டின் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. (பிப்ரவரி 8)
- இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 113 பேரை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. (பிப்ரவரி 9)
- தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. (பிப்ரவரி 9)
- மாலத்தீவு நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி குறித்து பிரதமர் மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் டெலிபோனில் அவசர ஆலோசனை நடத்தினர். (பிப்ரவரி 9)
- நடப்பு 2017- 2018-ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் (ஏப்ரல்- டிசம்பர்) ரூ. 17 ஆயிரம் கோடி மதிப்புக்கு 51 லட்சம் டன் பருப்பு இறக்குமதி ஆகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. (பிப்ரவரி 9)
- | DOWNLOAD - FIND YOUR NEEDS HERE
No comments:
Post a Comment