Ad Code

மே 24-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் சிறு தொகுப்பு

குல்வீர் சிங்
  • கடந்த வாரங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்கள் பயன்பெறும் வகையிலான தகவல்கள் இங்கே வழங்கப்படுகின்றன. மே 24-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் சிறு தொகுப்பு இது...
  • பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளுக்கு உலகளாவிய அங்கீகாரம் பெறும் முயற்சிகளின் முக்கிய மைல்கல்லாக உலக சுகாதார அமைப்புக்கும், மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை உலகளாவிய சுகாதாரத்தில் கொண்டு சேர்ப்பதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. (மே 25)
  • வெனிசுலா நாட்டில் நாடாளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. 285 உறுப்பினர்களை கொண்ட இந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் ஆளும் சோசலிஸ்ட் கட்சியினர் 230 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அந்த நாட்டின் புதிய அதிபராக நிகோலஸ் மதுரோ மீண்டும் தேர்வாகி உள்ளார். (மே 27)
  • குஜராத் மாநிலம் தாஹோத் நகரில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில்வே என்ஜின் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 9 ஆயிரம் எச்.பி. திறன் கொண்ட ரெயில்வே என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த என்ஜின் 4,600 டன் எடையுள்ள சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் படைத்தது. (மே 24)
  • பிரதமர் மோடி தலைமையின் கீழ் சுகாதார உள்கட்டமைப்பு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். தற்போது சுகாதாரத் துறைக்கான பட்ஜெட் ரூ1.35 லட்சம் கோடி எனவும், நாட்டில் 780 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாகவும், எம்.பி.பி.எஸ். சீட்டுகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். (மே 26)
  • கல்வி, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப்பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண், பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்கக் கலைஞர் குருவாயூர் துரை ஆகியோருக்கு பத்ம விருது என 68 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்கப்பட்டன. (மே 27)
  • தமது ஒட்டுமொத்த மின் தேவையையும் சூரியசக்தி மூலம் பெறும் நாட்டின் முதல் மாவட்டமாக தாத்ரா மற்றும் நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் உள்ள டையூ உருவெடுத்துள்ளது. (மே 29)
  • சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய், ஏ.எஸ்.சந்தூர்கர் ஆகிய மூன்று நீதிபதிகளும் பதவி ஏற்று கொண்டனர். (மே 30)
  • விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வந்த மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்தன. 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந் தேதி தொடங்கிய இந்த அகழாய்வில் 22 குழிகள் தோண்டப்பட்டு 5,003 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. (மே 24)
  • தமிழகத்தில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. (மே 26)
  • தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு குழு விவாதம், நடிப்பு, கலந்துரையாடல் என பல்வேறு செயல்பாடுகள் அடங்கிய `வாசிப்பு வாரம் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. (மே 28)
  • தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் இந்தியாவின் முதல் கடல்பசு பாதுகாப்பு மையம் தமிழ்நாடு நிலையான பெருங்கடல் வளங்கள் மற்றும் நீலப்பொருளாதார திட்டத்தின் கீழ் அமைய உள்ளது. (மே 28)
  • தமிழக அரசின் 10 அரசு சேவைகளை எளிமையாக்கும் `எளிமை ஆளுமை’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். (மே 29)
  • தமிழகத்தின் வில்லிபுத்தூர் அலமேலு மங்கையர்க்கரசி உள்பட 15 நர்சுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நைட்டிங்கேல் விருது வழங்கினார். (மே 30)
  • அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் தங்களுடைய சொந்த நாடுகளுக்கு அனுப்பும் பணத்துக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இந்த புதிய அறிவிப்பு இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் என கூறப்பட்டது. இதன் அடிப்படையில், சொந்த நாட்டுக்கு அனுப்பும் பணத்துக்கான வரி 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. (மே 24)
  • கடந்த ஜனவரி 20-ந் தேதி, ஒரே நாளில் நாடு முழுவதும் சுமாா் 5.9 லட்சம் ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. (மே 24)
  • கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் மும்மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மார்ச்சில் 75.52 ஜிகாவாட்டாக இருந்த நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன், தற்போது பெரிய நீர்மின் உற்பத்தி நிலையங்களுடன் சேர்ந்து 232 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டில், உலகளவில் காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தியில் ஜெர்மனியை முந்தி மூன்றாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. (மே 26)
  • இந்தியாவின் வேளாண்மை மற்றும் அது தொடர்புடைய துறைகளின் ஏற்றுமதி 2024-25-ம் நிதியாண்டில் 6.47 சதவீதம் உயர்ந்து 5,191 கோடி டாலரை எட்டியுள்ளது. (மே 27)
  • இந்திய விமானப் படையிடம் 5-ம் தலைமுறை போர் விமானம் இல்லை. எனவே தனியார் பங்களிப்புடன் 5-ம் தலைமுறை போர் விமானங்களை வடிவமைத்து உருவாக்கும் திட்டத்துக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஒப்புதல் அளித்துள்ளார். தனியார் பங்களிப்புடன் ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு நிறுவனம் இந்த விமானங்களை தயாரிக்கும். (மே 27)
  • எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை 3-வது முறையாக தொடர் தோல்வியை சந்தித்து உள்ளது. சுமார் 400 அடி உயரம் கொண்ட உலகின் பெரிய ராக்கெட்டுகளில் ஒன்றான இது, ஏவப்பட்ட 30-வது நிமிடத்தில் கோளாறு ஏற்பட்டது. (மே 28)
  • செவ்வாய் கோளுக்கு அருகே உள்ள 2016 எச்.ஓ.3 என்ற விண்கல்லில் ஆய்வு மேற்கொள்வதற்காக, அந்த விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்துவருவதற்கான தியான்வென்-2 விண்கலத்தை சீனா விண்ணில் செலுத்தியது. லாங் மாா்ச் 3-பி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ள இந்த விண்கலம், `311பி’ என்ற வால் நட்சத்திரத்தையும் ஆய்வு செய்யும். (மே 29)
  • ஜெனிவா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் நடந்தது. இதில் நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் 5-7, 7-6 (7-2), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் ஹர்காசை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சர்வதேச டென்னிசில் அவர் கைப்பற்றிய 100-வது பட்டம் இதுவாகும். இந்த மைல்கல்லை எட்டிய 3-வது வீரர் ஜோகோவிச் ஆவார். (மே 24)
  • இத்தாலியின் சீரி ஏ கால்பந்து லீக் தொடரில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை நேபோலி அணி கைப்பற்றியது. (மே 24)
  • ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் சுல் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் தேஜஸ்வனி, இறுதி ஆட்டத்தில் 31 புள்ளிகள் சேர்த்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். (மே 26)
  • ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் தங்கப்பதக்கம் வென்றார். 20 கிலோமீட்டர் தூர நடைபந்தயத்தில் தமிழக வீரர் செர்வினுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. (மே 27)
  • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர இரட்டையர் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை முதல் சுற்றில் வெற்றி பெற்றது. (மே 28)

Post a Comment

0 Comments

Ad Code