Saturday 9 March 2019

தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றமும் அதன் அதிகாரங்களும்

குல்பூஷண் ஜாதவ் வழக்கு தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் சமீபகாலமாக செய்திகளில் அதிகம் அடிபடுகிறது.

சர்வதேச நீதிமன்றம் என்பது என்ன? அதன் பணிகள் என்ன?

சர்வதேச நீதிமன்றமே ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மையான நீதிமன்றம். நெதர்லாந்தின் தி ஹேக்கில் இயங்கும் இந்த நீதிமன்றத்தின் முக்கிய வேலை, உலக நாடுகளுக்கு இடை யிலான சச்சரவுகளைத் தீர்த்து வைப்பதுதான்.

கடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளில் ஒருவராக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரியும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக சுப்ரீம் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக பண்டாரி பணியாற்றியிருக்கிறார்.

ஒரு நாட்டின் வழக்கு சர்வதேச நீதிமன்றத்துக்கு வரும்போது, தொடர்புடைய நாட்டின் நீதிபதி யாரும் சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வில் இல்லையென்றால், அந்நாடு தற்காலிக நீதிபதியாக ஒருவரை குறிப்பிட்ட வழக்குக்காக நியமிக்கலாம்.

பாகிஸ்தான் நீதிபதிகள் யாரும் சர்வதேச நீதிமன்றத்தில் இல்லையென்பதால் கடந்த ஆண்டு தற்காலிக நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதி தஸாடக் ஹுசைன் ஜிலானி தற்போது குல்பூஷண் வழக்கை விசாரிக்கும் அமர்வில் தற்காலிக நீதிபதியாகச் செயல்படுகிறார்.

ஒவ்வொரு நாடும் தன்னிடம் கொண்டு வரும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவது சர்வதேச நீதிமன்றத்தின் முக்கிய வேலை.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் உறுப்பு அமைப்புகள் ஆகியவை இதனை அணுகும்போது சட்டம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதும் இதன் பணியாகும்.

15 நீதிபதிகளை கொண்டது சர்வதேச நீதிமன்றம். நீதிபதிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஐ.நா. பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு சபையால் நியமிக்கப்படும் இந் நீதிபதிகளுக்கு பதவிக்காலம் ஒன்பது ஆண்டுகள்.

சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் தத்தமது நாடுகளின் பிரதி நிதிகளாகப் பணி புரியமாட்டார்கள். மாறாக, சுதந்திரமான மாஜிஸ்திரேட்டாக செயல்படுவார்கள்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் மட்டுமே சர்வதேச நீதிமன்றத்தை அணுக முடியும். ஐ.நா. சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகள்தான் சர்வதேச நீதிமன்றத்தை அணுகமுடியும்.

தனது அதிகார வரம்பை ஏற்றுக்கொள்ளும் நாடுகள் கொண்டுவரும் வழக்குகளை மட்டுமே இந்நீதிமன்றம் விசாரிக்கும். முதலில் சம்பந்தப்பட்ட நாடுகள் வழக்கைப் பதிவு செய்து எழுத்துப்பூர்வமாக ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகே நேரடியாக பொது விசாரணையில் தங்களது வாத, பிரதிவாதங்களை எடுத்து வைக்க முடியும்.

சரி, சர்வதேச நீதிமன்ற முடிவுகள் கட்டாயமாக அமல் படுத்தப்படுகிறதா?

இரு தரப்பின் வாத விவாதங்களைக் கேட்ட பிறகு, தனிக் கூட்டம் நீதிமன்றத்தில் நடக்கும். அதன் பின்னர் சர்வதேச நீதிமன்ற பொது அவையில் தீர்ப்பு வாசிக்கப்படும். இந்தத் தீர்ப்பே இறுதியானது. மேல்முறையீடு செய்ய முடியாது.

சம்பந்தப்பட்ட தரப்பு தீர்ப்பை நிறைவேற்றத் தவறும்பட்சத்தில் மற்றொரு தரப்பு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு இவ்விவகாரத்தைக் கொண்டு செல்லும்போது, ஐ.நா.வின் உறுப்பினர்களில் உள்ள ஐந்து ‘வீட்டோ’ அதிகார நாடுகளும் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு முட்டுக்கட்டை போட முடிவு செய்துவிட்டால் அந்த விவகாரத்துக்கு தீர்வே கிடைக்காமல் போகக்கூடும்.

1946-ல் இருந்து இந்நீதிமன்றம் எல்லை சார்ந்த விவகாரங்கள், பிராந்திய இறையாண்மை தொடர்பான விவகாரங்கள், பணயக்கைதிகள், தஞ்சம் கோரும் உரிமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தீர்ப்பு வழங்கி வருகிறது.

ஆனால், சர்வதேச நீதிமன்றம் வெற்றிகரமாக மட்டுமே செயல்பட்டுள்ளது எனக் கூற முடியாது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இந்நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஆனால் இதை உருவாக்கியவர்கள் சர்வதேச பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு மன்றமாக இதைக் கருதினார்கள். அதனை முழுமையாக நிறைவேற்ற இந்நீதிமன்றம் தவறிவிட்டது. அதற்குக் காரணம் பல்வேறு அரசுகள்தான்.

1984-ல் நிகரகுவாவின் சான்டிநிஸ்டா அரசு ஒரு வழக்கு தொடுத்தது. அமெரிக்க ஆதரவு கான்ட்ரா கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் புகார் தொடுத்தது.

இதை தனது அதிகார எல்லைக்குட்பட்ட விஷயமாக நீதிமன்றம் கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த ரொனால்டு ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு, மேற்கொண்டு இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ள மறுத்தது.

1977-ல் அர்ஜென்டினா- சிலி இடையிலான பீகில் கால்வாய் தொடர்பான சச்சரவில் சர்வதேச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்க மறுத்தது அர்ஜென்டினா. போப் இதில் தலையிட்ட பின்னரே போர் தடுக்கப்பட்டது.

சர்வதேச நீதிமன்றம், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகளை மட்டுமே விசாரிக்கிறது. தனிநபர்களைத் தண்டிக்க முடியாது. ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச குற்ற வியல் நீதிமன்றமும், சர்வதேச நீதிமன்றமும் வேறுபட்டவை.

மோசமான குற்றங்கள், இனப்படுகொலை, மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் உலகத்தின் எந்தப் பகுதியிலும் நடக்கும் போர் குற்றங்களையும் குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கும்.

No comments: