Monday 15 October 2018

சிற்றிலக்கியங்கள்

நாயக்கர்கள் ஆட்சிக் காலம் சிற்றிலக்கிய காலம்.

தமிழில் 96 வகை சிற்றிலக்கியங்கள் உண்டு.

பரணி, தூது, உலா, அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், கோவை, பள்ளு, குறவஞ்சி ஆகியவை முக்கிய சிற்றிலக்கிய வகைகள்.

போரில் ஆயிரம் யானைகளை கொன்றவனை போற்றிப் பாடப்படுவது பரணி.

தோற்றுப்போன நாட்டின் பெயரில் பரணி பாடப்படுகிறது. திராவிட பரணி இந்த இலக்கண முறைக்கு விதிவிலக்காக, திராவிட நாட்டின் வெற்றியை பாடுவதாக அமைந்துள்ளது.

தமிழ் பரணி நூல்களில் புகழ்பெற்றது கலிங்கத்துப் பரணி. இதை எழுதியவர் ஜெயங்கொண்டார்.

குலோத்துங்க சோழனின் தளபதியான கருணாகர தொண்டைமான் கலிங்கத்தை வெற்றி கொண்டதை சிறப்பித்துப் பாடுகிறது கலிங்கத்துப்பரணி.

குறவஞ்சியில் புகழ்பெற்றது திருக்குற்றால குறவஞ்சி. இதை திரிகூடப்பராசப்ப கவிராயர் பாடினார்.

கடவுளை அல்லது பெரியோரை குழந்தையாக பாவித்து பாடும் இலக்கியம் பிள்ளைத்தமிழ். பிள்ளைத் தமிழ் ஆண்பால் பிள்ளைத்தமிழ் பெண்பால் பிள்ளைத் தமிழ் என 2 வகைப்படுகிறது.

10 பருவங்களில் பிள்ளைத்தமிழ் பாடப்படும். காப்பு, தால், செங்கீரை, அம்புலி, வருகை, முத்தம், சப்பாணி என ஏழு பருவங்கள் இருபால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவானவை.

சிற்றில், சிறுதேர், சிறுபறை என்பன ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு உரிய மூன்று சிறப்பு பருவங்கள். கழங்கு, அம்மானை, ஊசல் போன்றவை பெண்பால் பிள்ளைத் தமிழுக்கு உரிய சிறப்பு பருவங்கள்.

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் மற்றும் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் போன்றவை புகழ்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல்களாகும்.

18 உறுப்புகளால் பாடப்படும் ஒரு சிற்றிலக்கியம் கலம்பகம். இளஞ் சூரியார், முதுசூரியார் எனும் இரட்டைப்புலவர்கள் கலம்பகம் பாடுவதில் புகழ்பெற்றவர்கள். நந்திக்கலம்பகம் புகழ்பெற்ற கலம்பக நூலாகும். இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.

தலைவன், தலைவி இருவரும் தூதனுப்பி பாடும் சிற்றிலக்கியம் தூது. அன்னம்,கிளி, மயில், மேகம், நெஞ்சு, பூவை, பாங்கி, வண்டு, குயில், தென்றல் ஆகியன தூது விடும் பொருட்களாக பாடப்பட்டுள்ளன. அழகர் கிள்ளைவிடு தூது, காக்கைவிடு தூது போன்றவை புகழ்பெற்றவை.

வீதிஉலா வரும் அரசரை கண்டு மகளிர் மயங்குவதாக பாடப்படுவது உலா.

பள்ளு வகை சிற்றிலக்கியத்திற்கு சிறந்த நூல் முக்கூடற்பள்ளு.

No comments: