தொல்காப்பியர், இலக்கியத்தின் அழகை வனப்பு என்ற பெயரால் 8 வகைப்படுத்தி விளக்கி உள்ளார். அவை : அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு.
சில மென்மையான சொற்களால், சில அடிகளில் அமைவது அம்மை. திருக்குறள், நாலடியார் போன்றவை அம்மைக்கு உதாரணங்களாகும். இயற்சொல்லால் அமையாமல் திரி சொல்லால் கடுநடையில் அமையும் ‘அழகு’க்கு பதிற்றுப்பத்து, ஒட்டக்கூத்தர் பாடல்கள் போன்றவை சான்று களாகும்.
பழமையான பொருள்பற்றி உரைநடை கலந்து வரும் தொன்மைக்கு ராமாயணம், பாரதம் போன்றவையும், இனிய சொற்களால் சிறந்தபொருள் பற்றி அல்லது பரந்த பல சொற்களால் அடி நீண்டு வரும் தோல் என்ற வனப்புக்கு கலித்தொகை, பத்துப்பாட்டு போன்றவையும் சான்றுகளாகும்.
புதிய பொருள் பற்றி அமையும் விருந்து எனும் வனப்புக்கு நாவல், புதுக்கவிதை போன்றவையும், ‘ஞ’ முதல் ‘ன’ வரையான மெய்யெழுத்துகளைக் கடைசி எழுத்தாக கொண்டு முடியும் இயைபுக்கு மணிமேகலையும் சான்றுகளாகும்.
தெரிந்த மொழியில் ஆராயாமலே பொருள் உணர்ந்து கொள்ளுமாறு பாடப்படும் ‘புலன்’ என்ற வனப்புக்கு இந்த கால பாடல்கள் சான்றாகும். இழைபு என்னும் வனப்பு வல்லொற்றுகள் பொருந்திய எடுத்தலோசை மிக்க சொற்களால் வருவது.
இவற்றில் அம்மை, அழகு, தோல் இயைபு, புலன், இழைபு என்பன வடிவு பற்றிய மரபுகள், தொன்மை, விருந்து என்பன பொருள் பற்றிய மரபுகள்.
No comments:
Post a Comment