ஐ.நா. சபையின் புதிய பொதுச் செயலாளராக கட்டரஸ் பதவி ஏற்றார் | "நெருக்கடியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன்" என உறுதிமொழி | ஐ.நா. சபையின் புதிய பொதுச் செயலாளராக கட்டரஸ் பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் உலகின் நெருக்கடியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன் என்று கூறினார். புதிய பொதுச் செயலாளர் உலக நாடுகளின் பொது அமைப்பாக ஐ.நா. சபை திகழ்கிறது. இதில் மொத்தம் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. தற்போது இதன் பொதுச் செயலாளராக தென் கொரியா நாட்டைச் சேர்ந்த பான் கீ மூன் இருந்து வருகிறார். இவருடைய பதவி காலம் வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் போர்ச்சுக்கல் நாட்டின் முன்னாள் பிரதமரான அன்டோனியோ கட்டரஸ் ஐ.நா. சபையின் புதிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்த பதவியில் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார். பதவி ஏற்பு இவர் 71 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐ.நா. சபையின் 9-வது பொதுச் செயலாளர் ஆவார். அவருடைய பெயரை தற்போதைய பொதுச் செயலாளர் பான் கீ மூன் பரிந்துரைத்தார். 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் கடந்த அக்டோபர் மாதம் அதற்கு ஒப்புதல் அளித்தது. 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் பொறுப்பு ஏற்க இருக்கும் 67 வயது கட்டரஸ் நேற்று முன்தினம் முறைப்படி ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:- அதிகாரம் பரவலாக்கப்படும் ஐ.நா. சபையில் உரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கும் விதமாக அதிகாரங்களும் பரவலாக்கப்படும். இந்த சீர்திருத்தங்கள் உலக நாடுகள் இடையே நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதாக அமையும். ஐ.நா. தனது மாற்றத்துக்கு தயார் நிலையில் இருக்கிறது. ஐ.நா. சபை மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படவேண்டியது அவசியம். அதேபோல் திறமை வாய்ந்த மற்றும் ஆக்கப்பூர்வமான அமைப்பாகவும் அது பணியாற்றவேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் மிகுந்த கவனம் செலுத்தும் அமைப்பாக அது செயல்படும். ஐ.நா. சபையின் செயல்பாடுகளில் அதிகாரிகளைவிட மக்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். திறன் உண்டு உலக அமைதியை பேணுவதில் ஐ.நா. பெரும் பங்காற்றி வருகிறது. எனினும் இன்று இதில் பல்வேறு சவால்கள் நம் முன்பாக காணப்படுகின்றன. அதில் பொதுச் செயலாளருக்கு உள்ள நெருக்கடிகளையும் அறிவேன். என்றபோதிலும் அவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் திறன் இந்த அமைப்புக்கு உண்டு. உலகில் காணப்படும் பல்வேறு நீண்டகால பிரச்சினைகளுக்கு எளிமையான முறையில் தீர்வு கண்டிட நம்மால் இயலும். இவ்வாறு அவர் கூறினார்.