அமெரிக்க பேராசிரியருக்கு பொருளாதார நோபல் பரிசு | பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்து வரும் வல்லுனர்களுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த பரிசை அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியரும், சிறந்த பொருளாதார வல்லுனருமான ரிச்சர்டு தாலர் (வயது 72) தட்டிச் சென்றுள்ளார். பொருளாதாரத்தின் உளவியல் குறித்த தாலரின் புரிதலுக்காகவும், பொருளாதாரத்தில் அவரது சிறந்த பணிக்காகவும் இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு குழு அறிவித்து உள்ளது. மனிதனின் குணாதிசயங்கள் தனிமனித முடிவுகளையும், சந்தை விளைவுகளையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை தாலரின் பணிநிலை காட்டுவதாக சுவீடிஷ் அறிவியல் அகாடமி கூறியுள்ளது. பொருளாதார முடிவுகளை எடுக்கும் களத்தில் உளவியல் ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளும், நடத்தை பொருளாதாரத்தின் முன்னோடி தாலர் என இந்த அகாடமி புகழாரம் சூட்டியுள்ளது. பொருளாதாரம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது மக்கள் எப்படி சிந்தித்து செயல்படுகிறார்கள்? என்பது குறித்து யதார்த்தமான பகுப்பாய்வுகளை இது ஒருங்கிணைக்கிறது என்றும் அந்த அகாடமியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. முன்னதாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்கள் என 'கிளாரிவேட் அனாலிடிக்ஸ்' அமைப்பு வெளியிட்டு இருந்த பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜனின் பெயரும் இடம் பெற்று இருந்தது. தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ரகுராம் ராஜனுக்கு இந்த பரிசு கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிச்சர்டு தாலருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment