முக்கிய நிகழ்வுகள் | 2017, நவம்பர் 27- டிசம்பர் 3 | போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. நவம்பர் 27-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...
- பஞ்சாப் நபா நகரச் சிறையில் இருந்து காலிஸ்தான் தலைவர் ஹர்மிந்தர் சிங் உள்ளிட்ட 6 பேரை மர்ம மனிதர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்டுச் சென்றனர். (நவம்பர் 27)
- ரூ. 500, 1000 நோட்டுகள் வாபசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நீங்கி இயல்பு நிலை திரும்ப ரிசர்வ் வங்கி தீவிர நடவடிக்கை எடுப்பதாக அதன் கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறினார். (நவம்பர் 27)
- உத்தரப்பிரதேச மாநிலம் குஷி நகரில் நடந்த பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'ஊழலை ஒழிக்க முயற்சிக்கும் நேரத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுப்பதா?' என்று எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி விடுத்தார். (நவம்பர் 27)
- கருப்புப் பணம் வைத்திருப்போருக்கு 50 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. (நவம்பர் 28)
- குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய அல் கொய்தா ஆதரவாளர்கள் 3 பேரை சென்னை, மதுரையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். (நவம்பர் 28)
- ரூபாய் நோட்டுப் பிரச்சினையில் மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் கேரளா, திரிபுராவில் மட்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. (நவம்பர் 28)
- ரூபாய் நோட்டு விவகாரத்தில், பாராளுமன்றத்தில் தொடர்ந்து போராட எதிர்க்கட்சிகள் கூட்டாக முடிவு செய்தன. (நவம்பர் 28)
- கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதை ஊக்குவிக்கும் வகையில், 'பாயிண்ட் ஆப் சேல்' கருவிக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. (நவம்பர் 28)
- பஞ்சாப் சிறையில் இருந்து தப்பிய காலிஸ்தான் தலைவர் ஹர்மிந்தர் சிங் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவருடன் தப்பிச் சென்ற மேலும் 5 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. (நவம்பர் 28)
- ரூ. 500, 1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற வங்கி பணப் பரிவர்த்தனை விவரங்களை ஜனவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். (நவம்பர் 29)
- காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 அதிகாரிகள் உள்பட 7 பேர் இறந்தனர். பயங்கரவாதிகள் பிடித்து வைத்திருந்த 16 பணயக் கைதிகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். (நவம்பர் 29)
- தென் மாநிலங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக மதுரையில் மேலும் 2 பேரை தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். (நவம்பர் 29)
- பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் அமளிக்கு இடையே வருமான வரி திருத்த மசோதா விவாதம் இன்றி நிறைவேறியது. (நவம்பர் 29)
- விடுதலைப்புலிகள் அமைப்பில் தளபதியாக இருந்து பின்னர் பிரிந்தவரான, இலங்கை முன்னாள் மந்திரி கருணா நிதி முறைகேடு புகாரில் திடீரென கைது செய்யப்பட்டார். (நவம்பர் 29)
- கொலம்பியாவில் பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 81 பேருடன் பறந்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 76 பேர் உயிரிழந்தனர். (நவம்பர் 29)
- திரையரங்குகளில் சினிமா திரையிடுவதற்கு முன் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. (நவம்பர் 30)
- 'ஜன்தன்' வங்கிக் கணக்குகளில் டெபாசிட் தொகை திடீரென அதிகரித்து இருப்பதால் அதன் வாடிக்கையாளர்கள் மாதம் ரூ. 10 ஆயிரம் மட்டும் எடுக்க அனுமதித்து ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனை விதித்தது. (நவம்பர் 30)
- உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடம் பெற்றதற்கான விருதை டெல்லியில் நடந்த விழாவில் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஜெகத்பிரகாஷ் நட்டா வழங்கினார். (நவம்பர் 30)
- கருப்புப் பணத்தைக் கண்டுபிடிக்க நாடு முழுவதும் 40 இடங்களில் மத்திய அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது. (நவம்பர் 30)
- திருச்சி அருகே வெடிமருந்துத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 18 தொழிலாளர்கள் உடல் சிதறிப் பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். (டிசம்பர் 1)
- பணத் தட்டுப்பாடு டிசம்பர் 30-ம் தேதிக்குள் தீரும் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லியில் கூறினார். (டிசம்பர் 2)
- கருப்புப் பணம் மாற்றி முறைகேட்டில் ஈடுபட்ட பொதுத்துறை வங்கி அதிகாரிகள் 27 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 6 பேரை மத்திய அரசு இடமாற்றம் செய்தது. (டிசம்பர் 2)
- கருப்புப் பணத்தை மாற்ற முயல்வோர் தப்ப முடியாது எனவும், இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது. (டிசம்பர் 2)
- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாடு முழுவதும் நடந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மெயின் தேர்வை 15 ஆயிரம் பேர் எழுதினார்கள். (டிசம்பர் 3)
- ஓட்டுக்கு பணம் தந்தால், தேர்தல் கமிஷனே தேர்தலை ரத்து செய்ய அதிகாரம் வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி டெல்லியில் கூறினார். (டிசம்பர் 3)
- துபாயில் வசிக்கும் இந்திய மாணவி கேகசன் பாசுவுக்கு சர்வதேச குழந்தைகள் அமைதி விருது, நெதர்லாந்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. (டிசம்பர் 3)