ஜி.சாட்-19 செயற்கைகோள் மூலம் "இணையதள சேவையில் அபரிமிதமான வளர்ச்சியை பெறமுடியும்" இஸ்ரோ இயக்குனர் கிரண்குமார் பேட்டி | ஜி.சாட்-19 செயற்கைகோள் மூலம் இணையதள சேவையில் அபரிமிதமான வளர்ச்சியை பெறமுடியும் என்று இஸ்ரோ இயக்குனர் கிரண்குமார் கூறினார். இஸ்ரோ இயக்குனர் ஏ.எஸ்.கிரண்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- மகத்தான நாள் இஸ்ரோ வரலாற்றில் இன்று ஒரு மகத்தான நாள். கடந்த 13 ஆண்டுகளாக கிரயோஜெனிக் சி-25 என்ஜினை படிப்படியாக மேம்படுத்தி உள்ளோம். ஜி.சாட்-19 என்ற செயற்கைகோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதின் மூலம் உலக அரங்கில் இஸ்ரோ மிகப்பெரிய சாதனை நிகழ்த்தி உள்ளது. தற்போது ஏவப்பட்டு உள்ள ராக்கெட் மூலம் பல்வேறு தகவல்களையும், அனுபவங்களையும் நாங்கள் பெற்றுள்ளோம். அதிக எடை கொண்ட ராக்கெட்டாக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 விளங்குகிறது. இதன்மூலம் 4 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தமுடியும். இது நவீன தொழில்நுட்பத்தை கொண்டது. எதிர்காலத்தில் இந்த வகை ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபடும். இந்த ராக்கெட்டில் உள்ள கிரயோஜெனிக் என்ஜினில் திட-திரவ எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. சாதனை பட்டியலில் இந்தியா செல்போன், இணையதள வசதி, அகண்ட வரிசை சேவை உள்ளிட்ட தகவல் தொடர்புகளில் ஒரு புரட்சி ஏற்படும். இந்த வகை சாதனைகளை குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே செய்துள்ளன. அந்த பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்று உள்ளது. குறிப்பாக முதல் முயற்சியிலேயே நாம் வெற்றி பெற்றுள்ளோம். எதிர்காலத்தில் எச்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம். விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு இதுவரை சரியான அனுமதி கிடைக்கவில்லை. இஸ்ரோ தயார் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 வகை ராக்கெட் மூலம் மற்றொரு செயற்கைகோளையும் விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளோம். தற்போது விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள ஜி.சாட்-19 செயற்கைகோள் இன்னும் ஓரிரு வாரங்களில் முழுமையாக செயல்பட தொடங்கும். வரும் 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன்-2 மற்றும் ஆதித்யா விண்கலத்தை அனுப்புவதற்கு முறையான அனுமதி கிடைத்துள்ளது. அபரிமிதமான வளர்ச்சி தற்போது அதிக எடை கொண்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதால் ஸ்ரீஹரிகோட்டாவில் கட்டமைப்பு 3 மடங்காக அதிகரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மார்க்-5 ராக்கெட்டை செலுத்துவதற்கான பணிகளும் நடந்து வருகிறது. ஜி.சாட்-19 செயற்கைக்கோள் மூலம் இணையதள சேவையில் அபரிமிதமான வளர்ச்சியை நாம் பெறமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment